வெள்ளி, 21 மார்ச், 2014

மடத்துவெளி சனசமூக நிலையம்


மடத்துவெளி சனசமூக நிலையம்கிராம மட்டங்களில் மக்களின் பல்வேறு அபிவிருத்திக்கும் மக்களின் விழிப்புணர்விற்கும் வழிகாட்டியாக அமைக்கப்படுவதே சனசமூக நிலையங்கள் ஆகும். இந்த வகையில் புங்குடுதீவில் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டு இயங்கி வருவது தான் இந்த மடத்துவெளி சனசமூக நிலையம் ஆகும்.
மடத்துவெளி சனசமூக நிலையம் என்பது புங்குடுதீவு மக்களின் மனதில் ஆழ பதிந்து தனது வரலாற்றை பதிவாக்கிக் கொண்ட ஒரு பெயராகும். மடத்துவெளி சனசமூக நிலையம் எழுபதுகளின் பின்னர் புங்குடுதீவில் ஒரு மாபெரும் புரட்சிகரமான மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஒரு சமூக அமைப்பாகும் . இந்த நிலையம் முறைப்படி ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்து நான்காம் ஆண்டு தைத்திங்கள் பதினைந்தில் யா/கி/ச/qvrep/௨௬௬ என்ற பதிவிலக்கத்துடன் ஆரம்பிக்கபட்டு கமலாம்பிகை கனிஸ்ட மஹா வித்தியாலய வளவினுள் அமரர் க. ஐயாத்துரை ஆசிரியர் அவர்களின் பாரிய முயற்சியினால் சிறப்பாக வழிநடத்தப்பட்டு வந்தது. பின்னர் இந்த சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட அமரர்.ச.சொக்கலிங்கம் அவர்கள் இந்த சனசமூகநிலையத்தை திறம்பட செயற்படுத்தி வந்திருந்தார். காலக்கிரமத்தில் தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட நிலையம் ஒரு ஸ்தம்பித நிலையை அடைந்திருந்தது. அறுபதுகளின் இறுதியில் கமலாம்பிகை வித்யாலய பழைய மாணவர்களான வ.நல்லையா (இராமச்சந்திரன் -நூலகர் )மகேஸ்வரன் (மலைப்பாம்பு) , எ.இராசரத்தினம் (மு-கி-ச-உறுப்பினர் , இ.இராசமாணிக்கம் (இசைக்கலைஞர் ) போன்றோர் இணைந்து ஒரு சமூக சேவைக்கான எழுச்சியை முனைப்பாக்கினர். இந்த கால கட்டத்தில் கமலாம்பிகை வித்தியாலய வளவினுள் ஒரு கலை விழாவினையும் பின்னர் வல்லன் சண்முகநாதன் வித்தியாசாலை வளவினுள் ஒரு சிவராத்திரி விழாவினையும் நடாத்தியதோடு அந்த விழாக்களிலேயே நாடகங்களையும் அரங்கேற்றி தமது கலைத் தாகத்தினையும் வெளிப்படுதினார்கள். இத்தனைக்கும் பின்னால் புங்குடுதீவு கிழக்கின் சிற்பி என்றும் புரட்சியாளன் என்றும் போற்றப்படும் கண்ணாடி என்று செல்லமாக அழைக்கப்படும் அருணாசலம் சண்முகநாதன் இந்த கிராமத்தின் சுமைகளை தூக்கி தன் தோளிலே வைத்தான். அவனது வழிகாட்டலில் புதிய இளைஞர் பாசறை ஒன்று கட்டி எழுப்ப பட்டது. முன்பு இயங்கி வந்த சனசமூக நிலையத்தின் எச்சங்களை துழாவி எடுத்தான். ஒரு சாய்வு படிக்கும் மேசை உடனும் இரண்டு வாங்குகளினுடனும் எச்சங்களாக சொக்கலிங்கம் ஆசிரியர் வீட்டில் சனசமூகநிலையம் சுருங்கி போய் கிடந்தது. வீறு கொண்டெழுந்த சண்முகநாதன் இராமச்சந்திரன். பாலசுப்ரமணியம், தர்மபாலன் போன்ற இளைஞர்களை இணைத்துக்கொண்டு இயங்க ஆரம்பித்தான். முதல் காரியமாக முருகன் ஆலய அன்னதான மடத்து மண்டபத்தில் இளமுருகன் சிறுவர் பாடசாலையை ஆரம்பித்து அதன் ஆசிரியையாக எஸ்.கமலாம்பிகை அவர்களை நியமனம் செய்தார்கள். கிராமத்து இளைஞர்கள் கிளிதட்டு விளையாட்டில் இருந்து கரப்பந்தாட்டத்துக்கு மாறினார்கள், விளையாட்டோடு நிற்காமல் ஒரு தற்காலிக வாசிகசாலையை அலுவலகத்தோடு சேர்த்து எ.வே.இளையதம்பி அவர்களின் கட்டிட தொகுதிக்கு பக்கத்தில் இடப்பக்கமாக நிறுவப்பட்டது. தரை சீமேந்தினாலும் சுவர் பகுதியை மரத்தினாலும் கூரையை ஓடு கொண்டும் எளிமையாக அமைக்கப்பட்ட சனசமூகநிலையம் எல்லோரும் பாராட்டும் விதமாக ஒரு இளைஞர் பாசறையாக அத்திவாரமாக அடித்தளமிட்டது. சனசமூக நிலையத்தின் நிர்வாகசபை இ.குலசேகரம்பிள்ளை ஆசிரியரின் தலைமையில் புதிய சரித்திரம் படைக்க புறப்பட்டது. சண்முகநாதனின் சிறந்த வழிகாட்டலிலும் சேவை மனம் படைத்த இளைஞர்களின் திறமையினாலும் சிறப்பாக செயல்பட்டது. சனசமூக நிலையத்தின் சிறப்பான தடைகள் இல்லாத வாசிகசாலை செயல்பாடு புங்குடுதீவு மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டது மறக்க முடியாதது. சனசமூகநிலயத்தின் முன்னணி வழிகாட்டிகளாக போசகர்களாக போ.நாகேசு (வர்த்தகர்), க.தியாகராசா ஆசிரியர், ஆகியோர் முன்னிற்க எ.சண்முகநாதன், என். தர்மபாலன், எஸ்.எம்.தனபாலன், சிவ.-சந்திரபாலன் மு.வேலுப்பிள்ளை,  பொன்.அமிர்தலிங்கம், க.சந்திரசேகரம் ஆகியோரின் நிர்வாக திறனில் நிலையம் அபரிதமான வளர்ச்சி கண்டது. பதவி ஆசை இல்லாத இளைஞர்களை அந்த பாசறை கொண்டிருந்தது என்பதை பெருமையாக சொல்லி கொள்ளவேண்டும். மூத்த உறுப்பினர்கள் பின்னே வந்த மிக சிறிய இளைஞர்களிடையே நிர்வாக பதவிகளை கொடுத்து தாங்கள் வழிகாட்டி கொண்டிருந்தது சிறப்பான ஒரு அம்சமாக மிளிர்ந்தது. அடுத்த தலைமுறையாக ப.யோகேஸ்வரன், எ.திகிலழகன், எம் .முத்துகுமார், எஸ்.எம் .குணபாலன், எ.சதாசிவம், கு.ஜெகநாதன்,  வே.கனகராசா, தா.சிவகுமார், ம.மோகனபாலன்,  து.ரவீந்திரன், எஸ் .சிவலிங்கம், க.உலகேஸ்வரன், தி.கருணாகரன், சி.விசயன், இ.ரவீந்திரன், எ.பாலசுந்தரம், கே.ரவி, எஸ்.சட்சிதானந்தன் சின்னதுரை, சு.சண்முகநாதன், ஐ.தர்மகுலசிங்கம், கா.நாகரத்தினம்,  தா.சிவபாலன் என்ற வரிசையில் ஒரு இளைஞர் பட்டாளமே உருவானது. சனசமூக நிலையத்தின் சீரிய செயற்பாடு கண்ட வர்த்தகர் எ.வே.இளையதம்பி அவர்கள் சனசமூகநிலையம் அமைந்திருந்த காணியை இனாமாக தாரை வார்த்து கொடுத்து பெருமை தேடிக்கொண்டார். நிலையத்துக்கு ஒரு இரட்டை மாடி கட்டிடத்தை நிறுவ சண்முகநாதன் திட்டம் வகுத்திருந்தார். இடைநடுவில் அவர் கனடாவுக்கு இடம்பெயர அப்போதைய நிதிநிலைமையை கணக்கிலெடுத்து கொண்ட ந.தர்மபாலன் திட்டத்தை மாற்றி இப்போதைய அமைப்பில் நிலையத்தை அமைக்க முன்னின்று பாடுபட்டார். தமக்கென காணி கிடைத்ததும் துரிதமாக செயல் பட்ட நிலையத்தினர் நிரந்தரமான ஒரு கட்டிடத்தை அழகாக அமைத்து ஒரு சாதனையை படைத்தனர். வாசிகசாலை சிறப்பாக வடிவமைக்கப்பட்டு அனைத்து பத்திரிகைகள் சஞ்சிகைகளும் வாசிப்புக்கென வைக்கப்பட்ட சிறப்பை கொண்ட வரலாறை படைத்திருந்தது. கிராமம் பூராக திரட்டப்பட்ட சுமார் 8௦௦ நூல்களைக் கொண்டதோடு வாசிகர்களின் உள்ளத்தை மகிழ்வூட்டவென வானொலி செவையையும் வழங்கி இருந்தது.  வாசகர்களுக்கென வீரகேசரி, ஈழநாடு, மித்திரன், தினகரன், சுதந்திரன் போன்ற பத்திரிகைகளும் குமுதம், ஆனந்தவிகடன், ராணி தேவி சுடர், சிரித்திரன், இதயம், சாவி, பாக்யா, மல்லிகை போன்ற வார இதழ்களும் தொடர்ந்து பல ஆண்டுகளாக விநியோகிக்கப்பட்டு வந்தது பெருமையான விசயமாகும். இவற்றை நீண்ட காலமாக பொ.நாகேசு , எஸ்.கே.மகேந்திரன், வே.பாலசுப்பிரமணியம், ப.கனகலிங்கம்,சிவ.சந்திரபாலன், க.உலகேஸ்வரன் போன்றோர் தங்கள் செலவில் வழங்கி வந்தனர். தினசரிப் பத்திரிகைகளை யாழ்நகரில் இருந்து தினமும் காலை நேரத்திலேயே தனது வாகன சேவையில் எடுத்து வந்த பொன்னம்பலம் அவர்கள் (இருபிட்டி)மறக்க முடியாத நன்றிக்குரியவர்.
சனசமூக நிலையத்தின் செயற்பாடுகள்
கிராமத்தின் குடி நீர் பிரச்சினையை தீர்க்க சிறிய கிணறுகளை தோண்டியமை.
பொதுக் கிணறுகளை தூர் வார்ந்தமை, குளங்களை ஆழமாக்கியமை, முற்று முழுதாக மது ஒழிப்பை உருவாக்கி கட்டுப்பாட்டில் வைத்திருந்தமை, மீன் பிடி, விநியோகத்தில் சீரான முறையை உருவாக்கியமை, விளையாட்டு துறையை ஊக்குவித்து வட மாகாணத்திலேயே சிறந்த உதைபந்தாட்ட கரப்பந்தாட்ட அணிகளை உருவாக்கியமை, கிராமத்தில் எந்த விதமான சமூக சீர்கேடுகளும் இல்லாத கட்டு கோப்பில் மக்களை வழி நடத்தியமை, ஆலயங்களின் தொண்டில் உதவியமை, அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி விடுதலை பாதையில் அணி வகுத்தமை, மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் உதவியமை, பாடசாலை முன்னேற்றத்தில் பங்களித்தமை, கலை விழாக்கள், சிவராத்திரி விழாக்கள் என நடாத்தி சிறந்த நாடக கலைஞர்களை உருவாக்கியமை, நெற்பயிர் செய்கைக்கு ஊக்கம் கொடுத்து விவசாயத்தை மேம்படுத்தியமை என நீண்டு செல்லும் வரலாறு உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக