வெள்ளி, 21 மார்ச், 2014

திருமதி உ. செல்வநாயகி

திருமதி உ. செல்வநாயகி

உ. செல்வநாயகியாழ்ப்பாணம் பிரதேசத்தில் மங்கள காரியங்களுக்கும் ஆலய விழாக்களுக்கும் அறுபது எழுபதுகளில் தெய்வீக இசையான நாதஸ்வரம், தவில் கச்சேரிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்த காலத்தில் பெண்கள் நாதஸ்வரம், தவில் வாசிக்கின்றார்களாம் என்றால் இரட்டிப்பான கூட்டம் கூடி இவ்விசையினை இரசிப்பார்கள். அவ்வாறான காலகட்டத்தில் தன் பத்தாவது வயதில் தவில் இசைக்கலை பயணத்தை  திருமதி உ. செல்வநாயகி (உதயகுமார் செல்வநாயகி – தோற்றம் – 02.08.2963) தொடர்ந்தார். இவர் இல. 349/2, பருத்தித்துறை வீதி, நல்லூரை வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார். இவர் தனது மாமனாரான சங்கரப்பிள்ளை முருகையாவிடம் தவில் கலையை நிறைவாகக் கற்றுத் தேர்ந்தவர். இவரது தாயார் நாதஸ்வரம் வாசிப்பதில் திறமையானவர். அதிகமான கச்சேரிகளை உ.
செல்வநாயகி தன் தாயாருடன் இணைந்தே யாழ்ப்பாணம், வன்னி, மற்றும் தமிழர் வாழும் இலங்கைத் தீவின் பல பாகங்களுக்கும் சென்று அங்கெல்லாம் தனது பேராற்றலை வெளிப்படுத்திய இவர் கடந்த முப்பத்தாறு வருடங்களாகத் தொழில் ரீதியாக இக்கலையினை பேணி செயற்பட்டு வருகிறார்.
வெளிநாடுகள் பலவற்றிற்கும் சென்று தனது தவில் கலை ஆளுமையை வெளிப்படுத்தி இருக்கும் இவரை சுவிஸ் பாசல் ஆலய நிர்வாகம் ”தவில் தென்றல்” என்ற பட்டத்தினை வழங்கி 2001ம் ஆண்டு பாராட்டிக் கௌரவித்தது. 2003 ம் ஆண்டும் இவரை சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்தில் இருக்கும் முருகன் கோவில் தேவஸ்தானத்தினர் கௌரவித்து ”லயஞானபூபதி” என்ற பட்டத்தினை வழங்கிக் கௌரவித்தது. இவரது கணவர் நல்லையா உதயகுமார் அவர்களும் தவில் கலைஞர் ஆவார். அவருடன் இவர் இணைந்து தவில் வாசித்துள்ளார். பரம்பரை வழியாக குடும்பத்தினர் அனைவருமே தவில், நாதஸ்வரக் கலையை பேணிச் செயற்படுத்தி வருகின்றனர். இவரது பிள்ளைகளான உதயசங்கர், ஜெயசங்கர், விஜயசங்கர் ஆகியோர் நாதஸ்வரம் வாசிப்பதில் வல்லவராக விளங்குகின்றார்கள். இக்கலையைத் தொடர்ந்தும் இவரது சந்ததியினர் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக உ. செல்வநாயகி இருக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக