வெள்ளி, 21 மார்ச், 2014

முத்துலட்சுமி கோபால்


முத்துலட்சுமி கோபால்யாழ் குடாநாட்டின் முதலாவது பெண் நாதஸ்வர இசைக்கலைஞர் என்ற பெருமையைப் பெற்றுள்ள திருமதி முத்துலட்சுமி கோபால் நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், சட்டநாதர் கோவிலடி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்டவர். ஆரம்பக் கல்வியை நெல்லியடி மத்திய கல்லூரியில் பயின்ற காலத்தில் கல்வியில் அதிக நாட்டமில்லாது தந்தையாருக்கு உதவியாக நாதஸ்வர இசையைக் கற்பதில் ஆர்வம் காட்டினார். நாதஸ்வர இசைக்கலையை பரம்பரைத் தொழிலாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்த முத்துலட்சுமி கோபால் தனது முதல் குருவாக பெரியசாமி என்பவரை ஏற்றுக்கொண்டு நாதஸ்வர இசை பயின்றார். பின்பு இந்தியக் கலைஞர்களான திருநாவுக்கரசு, தற்சிதானந்தம் ஆகியோரிடம் நாத
ஸ்வர இசைக் கலையின் நுட்பங்களைக் கற்றுத் தேறினார். 

முத்துலட்சுமி கோபால் பன்னிரண்டாவது வயதில் முதலாவது நாதஸ்வர இசைக் கச்சேரியை நல்லூர் சட்டநாதர் ஆலயத்தில் அரங்கேற்றினார். ஆரம்பத்தில் தந்தையாருடன் உதவி நாதஸ்வரம் வாசித்து வந்த முத்துலட்சுமி கோபால் இசைக்  கச்சேரிகளை மேலும் தொடரும் முகமாக கல்வியங்காட்டில் நிரந்தரமாக வசிக்க வந்தார். ஆலயங்களின் விழாக்களில் தனது நாதஸ்வர இசைக் கச்சேரிகளை நடாத்தி பல ரசிகர்களின் பாராட்டுதலைப் பெற்றுக் கொண்டார்.
ஆண்களால் மட்டுமே நாதஸ்வரம் வாசிக்க முடியும் என்ற நிலைப்பாட்டை மாற்றி, பெண்களாலும் வாசிக்க முடியும்  என்பதை முதன் முதலில் வெளிப்படுத்திய இப் பெண்மணி தனது பெண் பிள்ளைகளான தையல்நாயகி நாதஸ்வரக் கலையிலும், செல்வநாயகியைத் தவில் இசையிலும் தேர்ச்சி பெறச் செய்துள்ளார். தற்போது அவர்கள் இருவரும் சேர்ந்து பல கச்சேரிகள் செய்து வருகின்றனர்.
இவரது நாதஸ்வர இசைத் திறமையைப் பாராட்டி நல்லூர் பாலகதிர்காம பிரதம குருக்கள் ”நாதஸ்வர கானவித்தகி” என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்துள்ளார். நல்லூர் பிரதேசக் கலாச்சாரப் பேரவையும் 2002ம் ஆண்டு நடைபெற்ற கலாச்சார விழாவில் ”கலைஞானச்சுடர்” விருது வழங்கி இவரைப் பாராட்டி பொன்னாடை போர்த்திக் கௌரவித்தது.
By – Shutharsan.S

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக