வெள்ளி, 21 மார்ச், 2014

கைம்மாறு.சிறுகதை

வெளிர் சிகப்பில் சின்னச் சின்ன வெள்ளைப் பூக்களிட்ட ஃபிரில் வைத்த கவுனில் குழந்தை தேவதை போலிருந்தாள்.
blood”அப்பா என்னோட டான்ஸ் ட்ரெஸ் எப்படிப்பா இருக்கு?”
“செல்லத்துக்கு எந்த ட்ரெஸ் போட்டாலும் அழகுதான்” சிரித்தான் சுந்தர் மகளைப் பார்த்து.
பதினொரு மணிக்கு சரியா வந்திடுங்கப்பா. நான்தான் முன் வரிசையில் நின்னு ஆடறேன். அப்புறமா கடைசில நாலு ப்ரைஸ் இருக்கு எனக்கு கையைக் குவித்து மடக்கியவள் ட்ராயிங்,பாட்டு,ரன்னிங் ரேஸ், சயின்ஸ் க்விஸ்.. ஒவ்வொரு பிஞ்சு விரலாக இதழ் போல் விரித்துக் கொண்டே வந்தாள்.
“பாம்… பாம்…’ ஒலி எழுப்பியது பள்ளி வேன்.
“வேன் வந்தாச்சு பாரு. நீ கிளம்பு பாப்பா. பத்
து மணிக்கெல்லாம் தாத்தா, பாட்டி, அம்மா, நான் நாலு பேரும் அங்கிருப்போம்” என்றான் அவளைப் போலவே ஒவ்வொரு விரலாக விரித்துக் காட்டி.
கண்கள் அகல ரசித்துச் சிரித்தவளாய் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு ஓடிய மகளை சந்தோஷமாகப் பார்த்திருந்த வேளையில் அவனுடைய கைபேசி சிணுங்கியது.
“டாக்டர் முத்து பேசறேன்…”
“சொல்லுங்க டாக்டர்…”
“அவசரமா “ஓ’ நெகட்டிவ் வேண்டியிருக்குப்பா. சிசேரியன். ரெட்டப் புள்ளங்க வேற. சிக்கலான பிரசவம்னு பக்கத்து டவுனிலிருந்து இங்க வந்து அட்மிட் ஆயிருக்காங்க இப்பதான்..”
“எத்தனை மணிக்கு ஆபரேஷன்?”
“மதியம் 2 மணிக்கு மேலே. அப்பதான் நல்ல நட்சத்திரம் பிறக்கிறதாம்!” – சிரித்தார்.
“சரி அவங்க குடும்பத்திலே…” என இழுத்தவனை இடைவெட்டி “கேட்காம இருந்தா சும்மா விடுவீங்களா என்னைய, விசாரிச்சிட்டேன். சொந்தத்தில இப்போ கூட இருக்கிறவங்க யாருக்கும் அந்த க்ரூப் இல்லையாம்” என்றார் டாக்டர்.
“சரிங்க டாக்டர்… அப்படின்னா… நான் முயற்சி பண்ணிப் பாக்கறேன்…” என்றபடி ஃபோனை வைத்தான் சுந்தர்.
“கவிதா’ என அவசரமாய் மனைவியை அழைத்தான் சுந்தர். “நீ அம்மா அப்பாவைக் கூட்டிட்டு முதல்ல போயிடறயாம்மா டான்ஸ் நேரத்துக்கு முடியாவிட்டாலும் ப்ரைஸ் கொடுக்கிற நேரத்துல வந்திடப் பார்க்கிறேன். அவசர வேலைம்மா…”
அவனைப் பற்றி நன்கு அறிந்த அவனுடைய மனைவி கவிதா, “சரிங்க…. ஒண்ணும் பிரச் னை யில்ல.. பாப்பாவைச் சமாளிக்க எனக்குத் தெரியும்” என்றாள் சமாதானமாய்.
ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் கண்கள் மின்ன விடைபெற்ற மகள், தான் போக இயலாது போனால் ஏமாற்றத்தில் எப்படிச் சோர்ந்து போவாள் என்பதை நினைக்கையில் மின்னல் வெட்டாய் ஒரு சின்னவலி. மறுகணம் சுறுசுறுப்பானான்.
தொடர்ச்சியாய் எண்களைத் தட்டியதில் ஓ நெகட்டிவ் பட்டியலில் இருந்த இரத்ததான தன்னார்வலர்களில் மூன்று பேர் ஊரில் இருக்கவில்லை. ஒருவனுக்குக் காய்ச்சல். இன்னொருவன் இரவு தண்ணியடித்து விட்டதாகத் தலையைச் சொறிந்தான். மீதமிருந்தது அசோக் மட்டுமே. ஆனால் பாவம் அவன் தங்கைக்கு அன்று திருமணம். தந்தை இல்லை. அவர் ஸ்தானத்தில் முன்னிருந்து நடத்துவது அவனே. என்ன செய்ய வேறு வழியில்லை அவனைத்தான் கூப்பிட்டாக வேண்டும்.
அது ஒரு அபூர்வ க்ரூப். எப்போதாவதுதான் தேவைப்படும். முன்னரே ஸ்டாக் செய்து வைத்தால் வீணாகி விடக் கூடாதென தேவைப்படும் சமயத்தில் அந்த க்ரூப் நபர்களைத் தொடர்பு கொண்டு கொடுக்க வைப்பதே வழக்கம். முன் கூட்டி திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சை எனில் கொடுப்பவர் சவுகரியத்தைப் பார்க்க இயலும். விபத்தோ அவசரத் தேவையோ வருகையில் இப்படிப் பாலமாகச் செயல்படுவது பழகிப் போன சவால்தான்.
அசோக்கின் எண்களைத் தயக்கத்துடன் அழுத்தினான்.
“என்னப்பா பொண்ணு பள்ளிக்கூடத்துல ஆண்டுவிழான்னு முகூர்த்தத்துக்கு வர மாட்டேன்னுட்ட… பரவாயில்ல. ஆனா கண்டிப்பா ரிசப்ஷனுக்குக் குடும்பத்தோட வந்திடணும், ஆமா…” என்றவன் இவன் பதில் பேசும்முன் “யப்பா.. யப்பா.. அங்கே இல்லை. இதெல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ரூமுல கொண்டு வைய்யப்பா..’ என யாரிடமோ படபடப்பாய்ச் சொல்லிக் கொண்டிருந்தான்.
தயங்கித் தயங்கி இவன் விஷயத்தைச் சொல்லவும், ஐந்து விநாடி அமைதிக்குப் பின், “முகூர்த்தம் பத்தரைக்கு முடியுது. பதினொரு மணிக்கு மண்டபத்து பின் வாசலுக்கு காரைக் கொண்டு வந்திடு..”
நன்றி சொல்லக் கூட வாய்ப்புக் கொடுக்காமல் தொடர்பைத் துண்டித்து விட்டிருந்தான். ஏன், அவனும் கூட அப்படியான நன்றியை எவரிடமும் எதிர்பார்த்ததில்லைதான். இது போன்ற ஒத்துழைப்புகள் எல்லாச் சமூக ஆர்வலர்களுக்குமே இயல்பான ஒன்றாகி விட்டிருந்தது.
கல்லூரி வயதில் இரத்ததானம் பற்றி அறியவந்து மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கொரு முறை இரத்தம் கொடுப்பதில் ஆரம்பித்த சேவை ஆர்வம், இப்போது தன்னார்வ இரத்த தானக் கழகத்தின் பொறுப்பாளர் ஆக்கியிருந்தது.
கழகத்துக்காக முகாம் நடத்துவது, கிடைப்பதில் குறிப்பிட்ட பங்கை அரசு மருத்துவமனைக்கு ஒப்படைப்பது, அவசரத் தேவைக்கு வழங்க முன்வருபவர் தொடர்பு விவரங்களை நுனிவிரலில் வைத்திருந்து எந்நேரத்திலும் ஏற்பாடுகளைக் கவனிப்பது இவை அவன் வாழ்வின் ஓர் அங்கமாகவே மாறி விட்டிருந்தது.
தான் அப்படி இருப்பதை பெரிய விஷயமாக எண்ணாதவன், சமயங்களில் நண்பர்கள் தங்கள் இயல்பு வாழ்வின் கெடுபிடிகள் கடமைகளிலிருந்து இப்படி விலகி, அனுசரித்து இவன் வார்த்தைக்காக ஓடி வருகையில் ஏற்படும் வியப்பும் நெகிழ்வும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
இன்று அசோக்.
ஊருக்கு சற்றே வெளியில் அமைந்த மண்டபம். கால் மணிக்கு முன்னதாகவே பின்வாசல் பக்கமாய் வண்டியைக் கொண்டு நிறுத்தி விட்டான் சுந்தர்.
சொன்ன நேரத்துக்குச் சரியாக அசோக் வெளியே வரவும், காரில் ஏற்றிக் கொண்டு
விரைந்தான். போக்குவரத்து நெரிசலுக்குள் மாட்டி, போராடித் தப்பித்து, அந்த தனியார் மருத்துவமனையின் பெரிய வளாகத்துள் நுழையும் போது மணி பனிரெண்டை நெருங்கி விட்டிருந்தது. இரத்தம் கொடுக்க வேண்டிய இடம் இருக்கும் கட்டடத்தின் முன்னால் சுந்தர் வண்டியை நிறுத்த, நீ ஸ்கூலுக்குக் கிளம்புப்பா சுந்தர். நான் டாக்ஸியோ ஆட்டோவோ பிடிச்சு மண்டபத்துக்குப் போயிக்கறேன்” என்றான் அசோக்.
“நல்லா சொன்னே போ. உன்னை மறுபடி நேரத்துக்கு மண்டபத்துல சேர்த்தால்தான் எனக்கு நிம்மதி. காரை பார்க் பண்ணிட்டு அப்படியே டாக்டர் முத்துவை எட்டிப் பார்த்துட்டு வரேன். சந்திச்சு நாளாச்சு. எம்மகளை மொதமொத தொட்டுத் தூக்கின மகராசனாச்சே…”
“சொன்னா கேட்க மாட்டே நீ…” என்றபடி அவசரமாய் அசோக் நடையைக் கட்ட, வரிசையாக இருந்த கட்டடங்களைத் தாண்டி, வளாகத்தின் பின்பக்கம் அமைந்த வண்டிகளுக்கான நிறுத்தத்தில் மெல்லச் சென்று காரை பார்க் செய்தான் அசோக்.
டாக்டர் முத்துவின் அறை இருந்த கட்டடத்தை நோக்கி நடந்த வேளையில் முன்னால் நடந்த இருவரின் சம்பாஷணை திடுமென அவன் கவனத்தை ஈர்த்தது.
“இரத்தம் கேட்டு எவ்ளோ நேரமாச்சு? என்ன வங்கி வச்சு நடத்துறானுக… அவசரம்னு சொல்லியாச்சு. கொடுக்கிற பய ஆரோக்கியமானவனா இருக்க ஒட்டிக்கு ரெட்டியா துட்டு தாரோம்னும் சொல்லியாச்சு. மணி பன்னெண்டாகப் போகுது. டாக்டர்க்கு போனைப் போட்டுக் கேளுடா அனுப்புறானுகளா இல்லையான்னு?” என்றார் ஐம்பதுகளில் இருந்த அந்தப் பெரியவர்.
“சும்மா சும்மா கேட்காதீங்கன்னு கோபப்படறாங்கப்பா… வெயிட் செய்யலாம்…” மகன் போலும்.
எதுவும் பேசாமல் அவர்களை வேகமாகக் கடந்தான். டாக்டரின் அறையை அடையும் அந்த சொற்ப நேரத்துக்குள் அவன் மனதினுள் ஒரு பிரளயமே நடந்து முடிந்திருந்தது.
“வாங்க சுந்தர். இப்பதான் லேபிலிருந்து ஃபோன் செஞ்சாங்க. நேரத்துக்கு ஏற்பாடு செஞ்சுட்டீங்க. ரொம்ப தாங்க்ஸ். அந்தக் குடும்பம் வேற பொசுபொசுன்னுட்டே இருந்தாங்க. அப்புறம், எப்படியிருக்கா செல்லப்பொண்ணு நல்லா படிக்கிறாளா?”
“ஓ… இன்னைக்கு “ஆனுவல் டே’. நாலஞ்சு ப்ரைஸ் வாங்குறா.. எல்லாம் உங்க ஆசிர்வாதம்” என்றவன், அவர் காட்டிய இருக்கையில் அமராமல், “டாக்டர் இந்த இரத்தத்தை உபயோகிக்க இருக்கிற குடும்பத்தோட நான் கொஞ்சம் பேசலாமா?” என்றான்.
வியப்பாகப் பார்த்தார் டாக்டர் முத்து.
எத்தனையோ முறை பல குடும்பத்தினர் நன்றி சொல்ல அவனைப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்த வேளையில் எல்லாம், பிடிவாதமாய் மறுத்து தன்னை அடையாளம் கூட காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து பறந்து விடுபவனின் இந்தப் புது விண்ணப்பம் ஆச்சரியப் படுத்தியது. மணியடித்து நர்சை வரவழைத்தவர் “மிஸ்டர் தணிகாசலமும் பையனும் எங்கேன்னு பாருங்க?” என்றார்.
“அவங்க பேஷண்டுக்கு யாரு?” கேட்டான் சுந்தர்.
“மாமனாரும், கணவரும். முன்ன நின்னு கவனிக்கிறது அவங்கதான். பொண்ணுக்கு ஏதோ குக்கிராமம். அங்க வசதிப்படாதுன்னு மொதல்ல டவுயனுல காமிச்சிருக்காங்க. அப்புறம்தான் திடீர்னு காலைலதான் அங்கிருந்து இங்க அனுப்பிட்டாங்க. ரெட்டை வாரிசு வரப் போகுதுன்னு குடும்பமே ஒரே பரபரப்புல இருக்கு. வாங்க போய் பார்க்கலாம்” என எழுந்தார்.
காரிடாரில் நடக்கையில் எதிரே வந்து கொண்டிருந்தார்கள் இவன் பார்த்த அதே பெரியவரும் மகனும். டாக்டர் அவனை அறிமுகப்படுத்தவும், “ரொம்ப சந்தோசம் தம்பி. என்ன விசயம். இரத்தம் கொடுத்தவருக்கு அதிகமா பணம் தேவைப்படுதா கொடுத்திடலாம்” என்றார்.
“அதெல்லாம் தேவையில்லைங்க. ஆனா ஒரு ரெக்வெஸ்ட். உங்க குடும்பத்துல யாராவது ஒருத்தர்,அரசு ஆஸ்பத்திரிக்குப் போய் ரத்தம் கொடுத்திட்டு வந்து, இந்த இரத்தத்தை வாங்கிக்கறீங்களா?”
“என்ன தம்பி பேசறீங்க? நாங்க பணமெல்லாம் கட்டியாச்சு. எங்களுக்கு இதெல்லாம் பழக்கமுமில்ல. மேலே என்ன விலைன்னாலும் கேளுங்க” கடுகடுத்தார் தணிகாசலம்.
“பொறுங்க ஐயா. அந்தப் பணத்தையே கரைச்சு ஏத்த முடியாதுதானே? இரத்தம் விற்பனைக்குக் கிடைக்கிற கடை சரக்கு இல்லங்க. தேவைக்கு உதவியா பெறப்படுற.. உயிர் காக்குற.. திரவம். அதுக்குன்னு வசூலிக்கப் படற பணம் இரத்த வங்கி இயங்கறதுக்காக. பணம் கட்டி வாங்கினாலும் இது நீங்க இலவசமா எடுத்துக்கற மாதிரிதான். ஏன்னா நம்ம நாட்டில எல்லோருமே எதையுமே இலவசமா வாங்கி ருசி கண்டுட்டோம். இப்படி ரத்தத்துக்கு ரத்தம் கேட்கலாம்ங்கறதே எனக்குக் கூடதான் இத்தன நாள் தோணாமப் போச்சு… பாருங்களேன்!”
இப்போது பெரியவரின் மகன் சுதாரித்துக்கொண்டு அவர் காதில் ஏதோ கிசுகிசுக்க அவர் தணிந்து, “தம்பி நான் பேசினதை கேட்டுட்டீங்க போலிருக்கு. மன்னிக்கணும் ஏதோ ஒரு பதட்டத்துல வார்த்தைங்க விழுந்துட்டு…”
“இல்லைங்க. நீங்க உங்க மனசுல உள்ளததானே கொட்டுனீங்க. பரவாயில்ல. உங்களப் போல எண்ணமுள்ளவங்களும் இருப்பாங்கன்னு எனக்குப் புரிய வச்சதுக்கு முதல்ல நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்..”
தணிகாசலத்தின் முகம் கோணியது.
“அட என்னங்க உங்கள சங்கடப் படுத்தணும்னு சொல்லல. ஒண்ணு தெரிஞ்சுக்கங்க. காசுக்காக இரத்தத்தை கொடுக்கிறவங்க ரொம்ப ரொம்பக் கொறைவு. பெரும்பாலும் ஒரு சேவையா நினைச்சுதான் கொடுக்கறாங்க பலரும். அதனாலதான் அதைத் தானம்னு கவுரவப் படுத்துறாங்க. நிறைய பேரு அதை ஒரு வழக்கமாகவே பண்ணிட்டிருக்கிறாங்க. உங்களை அப்படி வற்புறுத்தல. அது தனி மனுச விருப்பம். ஆனா இப்படிக் குடும்பத்துல ஒருத்தருக்குத் தேவை வரும் போதாவது கொடுக்கலாமே.ஒரு ஆளு கொடுக்கிற இரத்தம் சில நேரம் மூணு உயிரைக் கூடக் காப்பாத்தும் தெரியுமா அரசு ஆஸ்பத்திரி பக்கம் போய்ப் பார்த்தீங்கன்னா எத்தன பேருக்கு எவ்வளவு தேவையிருக்குன்னு உங்களால நிச்சயம் உணர முடியும்.”
பணிவான அவன் பேச்சுக்குப் பிறகும் இறுக்கமாகவே தணிகாசலம் நின்றிருக்க, அருகிலிருந்த பெஞ்சிலிருந்து ஒரு வயதான பெண்மணி மெல்ல எழுந்து சுந்தர் அருகே வந்தார்.
“தம்பி. எம் மகனை எலிக்காச்சல்ன்னு ஆசுபத்திரில போன வாரம் சேர்த்தோம். முழு இரத்தமும் மாத்தணும்னுட்டாங்க. பேரன் கூடப் படிக்கற பசங்க, அவங்க ஃப்ரெண்டுங்கன்னு 40, 45 பேரு மடமடன்னு வந்து அஞ்சே மணி நேரத்துல இரத்தம் கொடுத்தப்போ என் நாடி நரம்பெல்லாம் நடுங்கிப் போச்சு. எங்கே யாரு பெத்த புள்ளங்களோ இப்படி நம்ம வூட்டுப்புள்ளைக்குக் கொடுத்துட்டுப் போயிட்டே இருக்காங்களேன்னு. இன்னிக்கு எம்மவன் கண்ணு முழிச்சுக் கிடக்கான்னா அதுக்கு அவங்கெல்லாம்தான் காரணம். அதுக்கு என்ன கைமாறு செய்ய முடியும்னு ஏங்கிப் போய்க் கிடந்தேன். எனக்கு நல்ல வழியொண்ணு சொன்னேப்பா. என் வயசுக்காரங்க இரத்தம் கொடுக்கலாமாப்பா…”
“தாராளமா கொடுக்கலாம்மா. அறுபத்தஞ்சு எழுபது வயசு ஆளுங்க வரை கொடுக்கறாங்க. உங்கள நல்லா செக் பண்ணிட்டு உடம்பு ஒத்துழைக்குமான்னு பாத்துட்டுதான் எடுப்பாங்க” என்றான் சுந்தர் கனிவும் நெகிழ்வுமாக.
“அரசு ஆசுபத்திரில எங்கேன்னு போய் கேட்கணும்பா?”
அவன் பதில் சொல்லும் முன், “வாங்கம்மா… அங்கதான் இப்பக் கிளம்பிட்டிருக்கேன். என் கூடவே அழைச்சுட்டு போறேன்” என அவரின் கையைப் பற்றினான் தணிகாசலத்தின் மகன்.
திகைத்து நின்றிருந்த டாக்டரைப் பார்த்து வரட்டுமா என சுந்தர் தலையசைக்க, அவர் “தொடருங்கள்… இது போலவே’ என்பது போலாகத் தன் கட்டை விரலை உயர்த்திக் காண்பித்து நிறைவாகப் புன்னகைத்தார்.
-ராமலக்ஷ்மி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக