வெள்ளி, 21 மார்ச், 2014

சேர் பொன்னம்பலம் இராமநாதன்

சேர் பொன்னம்பலம் இராமநாதன்

சேர் பொன்னம்பலம் இராமநாதன்
சேர் பொன்னம்பலம் இராமநாதன் (ஏப்ரல் 16, 1851 – நவம்பர் 26, 1930) இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர்.
வாழ்க்கை வரலாறு
  1. பொன்னம்பலம் இராமநாதன் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம் என்பவரின் இரண்டாவது புதல்வராக கொழும்பில் பிறந்தார்.
குமாரசாமி முதலியார், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோரது சகோதரர். ஆரம்பக் கல்வியை கொழும்பு இராணிக் கல்விக்கழகத்தில் கற்றார். 13 ஆவது வயதில், பிரெசிடென்சி கல்லூரியில் கல்வி கற்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டார். சேர் றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக் கல்வி பயின்று 1873 இலே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். பின்னர் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவிவகித்து 1906 ஆம் ஆண்டு, பணி ஓய்வு பெற்றார்.
அரசியல் சேவை
1879 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டநிரூபண சபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். 1921 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசினால் பிரபுப் பட்டம் (Sir) வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும் வாதத் திறமையும் வாய்க்கப்பெற்ற இவர், இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி இலங்கையரின் நலன்களைப் பாதுகாத்தார்.
சமூக சேவை
இவர் அரசியல் மூலம் மக்களுக்குச் செய்த தொண்டுகள் தவிர, சமய, சமூகத் துறைகளிலும் சேவை செய்துள்ளார். இந்துக்களின் கல்வி மேம்பாட்டுக்காக யாழ்ப்பாணத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு பாடசாலைகளை நிறுவியுள்ளார். இவற்றில் பெண்கள் பாடசாலையான உடுவிலில்அமைந்துள்ள இராமநாதன் பெண்கள் கல்லூரி இன்றும் யாழ்ப்பாணத்தின் முக்கிய கல்லூரிகளிலொன்றாக விளங்கிவருகிறது. ஆண்கள் பாடசாலையான பரமேஸ்வராக் கல்லூரி 1970 களின் தொடக்கத்தில்யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஒரு பகுதியாக்கப்பட்டது.
சமய சேவை
அருள்பரானந்த சுவாமிகளின் தொடர்பால் சமயம்,  தத்துவம்,  யோகநெறி என்பனவற்றைத் தெளிவாகக் கற்றுணர்ந்தார். கீழைத்தேய மெய்யியல் தூதுவராக 1905 – 1906 இலே அமெரிக்கா சென்று சொற்பொழிவுகளாற்றிப் பெயர் பெற்றார். சைவசித்தாந்த மகாசமாஜத்தின் முதல் மாநாட்டிற்குத் (1906) தலைமை வகித்தார்.
தந்தை கொழும்பு கொச்சிக்கடையிற் கட்டி 1857 நவம்பரிலே குடமுழுக்கு செய்வித்த, ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார்.
1923 ஆம் ஆண்டிலே யாழ்ப்பாணத்திற் சைவ வித்தியாவிருத்திச் சங்கம் தோன்றுவதற்குக் காலாக இருந்ததோடு அதன் முதற் தலைவராகவும் பள்ளிக்கூடங்களின் முகாமையாளராகவும் 1926 வரை சேவை செய்தார். தொடர்ந்து அதன் போஷகராகவும் விளங்கினார்.
யாழ்ப்பாணத்தில் சாதியமைப்பு முறை இறுக்கமாக இருந்த காலகட்டத்தில் வாழ்ந்த இராமநாதன் உயர்சாதியினருக்குச் சார்பாகவே நடந்துகொண்டார் எனவும்,  ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு ஆதரவான சட்டங்களை எதிர்த்தார் எனவும் சிலர் இவர்மீது குற்றம் சாட்டுகிறார்கள்.
அரசியலில் இவர் நாட்டுக்குச் செய்த சேவையைக் கௌரவிப்பதற்காக கொழும்பில் பழைய நாடாளுமன்ற வளாகத்துக்குள் இவரது சிலைநிறுவப்பட்டுள்ளது.

சேர்.பொன். இராமநாதன்.

சைவத் தமிழுலகில் தலைசிறந்த பெரியார் வரிசையில் சேர்.பொன். இராம நாதனுமாவார். இவர் கல்வியால், ஆன்மீகச் சிந்தனையால், கலையார்வத்தினால் சிறந்து விளங்கினார். மானிப்பாயிலே பிறந்தார். பட்டங்கள், பதவிகளைப் பெற்று வேறு இடங்களிற்கு சென்றமையால்  பிறந்த இடத்தில் தொடர்ந்து வாழமுடியவில்லை.
தென்பகுதியில் சிங்கள, இஸ்லாமியரிடையே ஏற்பட்ட கலவரத்தை பிரிட்டிஸ் அரச சபை முதல்வரிடம் சென்று பேசி சிறப்பான முறையில் பேசித்தீர்த்து வைத்தார். இலண்டனில் இருந்து இலங்கை வந்த போது சிங்கள மக்களே துறைமுகத்திலிருந்து தாமே ஊர்வலமாக வண்டியினை இழுத்தமை இவருடை பேச்சுத் திறமையினையும், தலமைத்துவ பண்பிணையும் வெளிப்படுத்துகின்றது. “சேர்”என்ற பட்டமும் வழங்கப்பட்டமையும் சட்ட நிரூபன சபையில் அங்கத்தவர் பதவியைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. 20ஆம் நூற்றாண்டுப் புலவர்களில் ஒருவராகவும் குறிப்பிடப் படுகின்றார். தமிழவேள் இவருடைய ஊர் மருதனார் மடம், இணுவில் என தமிழ் பலவர் மாநாட்டு சிறப்பு மலரில் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலே சிறந்த சிவன் ஆலயம் ஒன்றினை நிறுவினார். இன்றுவரை இதனை இவரது சந்ததியினர் சிறப்புடன் பராமரிக்கின்றனர். சைவமும் தமிழும் தழைத்தோங்கும் யாழ்ப்பாணத்திலே திருநெல்வேலியிலே பரமேஸ்வராக் கல்லூரியையும், பரமேஸ்வரா ஆலயத்தையும் அமைத்தார். இணுவில் கிராமத்திலே 25 ஏக்கர் காணியை வாங்கி பெண்களுக்கென இராமநாதன் கல்லூரியை 1913 இல் நிறுவினார். தமிழர்களின் பண்பாட்டினைப் பிரகாசிக்கும் வகையிலே மாணவரது செயற்பாடு அமையவேண்டுமென சித்தம் கொண்டார். இக்கல்லூரியின் வடமேல் திசையில் தனக்கென ஒருமனை அமைத்து அற வாழ்வினை மேற்கொண்டார்.
தன்னுடைய சமாதியை அச்சூழுலிலே அமைக்கவேண்டும் என்ற நோக்கிலே அதேயிடத்தில் ஒரு ஆலயம் அமைக்கவும் ஏற்பாடு செய்திருந்தார். இவருடைய மருமகன் சு.நடேசம்பிள்ளை இவருடைய கனவினை நனவாக்கி வைத்தார். இவரது உருவச் சிலை கொழும்பில் அமைக்கப்பட்ட பொழுதிலும் இவர் வாழ்ந்த இடமான இராமநாதன் கல்லூரி முன்றலிலும் ஒரு முழுஉருவச்சிலை  அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 1938-1940 காலப்பகுதியில் இவரது சமாதியடைந்த இடத்தில் இராமநாதேஸ்வரன் கோயில் இந்திய சிற்பக்கலை மரபினை ஒட்டி இந்தியக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டு கருங்கற்களால் கட்டப்பட்டு புனிதமாக பேணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்தாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக