வெள்ளி, 21 மார்ச், 2014

வயலின் வித்துவான் வே.சங்கரலிங்கம்


வே.சங்கரலிங்கம்கலாபூசணம் ‘வயலின் வித்துவான்’ அமரர் திரு. வே.சங்கரலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் ‘பருத்தியடைப்பு’ என்னும் பகுதியில் சாதாரண தொழிலாளர் குடும்பம் ஒன்றில் 1922 ஆம் ஆண்டு பிறந்தவர்தான் நமது கலாபூசணம் ‘வயலின் வித்துவான்’ அமரர் திரு.வே.சங்கரலிங்கம் ஐயா அவர்கள். ஆரம்பக் கல்வியை கரம்பன் சண்முகநாதன் வித்தியாலயத்திலும் பின்னர் திருநெல்வேலி முத்துத் தம்பி வித்தியாலயத்திலும் கற்ற இவர் எட்டாம் வகுப்புடன் பாடசாலைக்கல்விக்கு ‘முழுக்குப் போட்டு’ விட்டு கலைத்துறையில் ஈடுபடலானார்.
தனது சொந்த மாமா திரு.கே.கே.குமாரசுவா
மி அவர்களிடமும், இந்தியாவில் இசைக்கல்வி பயின்று இலங்கை வந்து ஊர்காவற்துறையில் பருத்தியடைப்பு என்னும் இடத்தில் இசையாசிரியராகக் கடமையாற்றிய தனது சித்தப்பாவான திரு.தில்லையம்பலம் அவர்களிடமும் வயலின் கற்றுக்கொண்டார். இவ்வாறு தொடர்ந்து ஒரு வருடகாலத்திற்கும் மேலாக வயலின் கற்றுக்கொண்ட இவர் வயலினைத் துறைபோகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவாவினால் 1938 ஆம் ஆண்டு இந்தியா பயணமானார். மதுரையில் இரண்டு வருடங்களும் நாகர் கோயிலில் ஆறு வருடங்களும் இவர் வயலின் கற்றுக்கொண்டார்.
அருணாசலம் என்ற அண்ணாவியாரிடம் இவர் வயலினைக் கற்றுக்கொண்டார். அரங்கேற்றமும் அங்கேயே நடந்தது. இந்தியாவில் வயலின் பயிலுவதானால் ‘வாய்ப்பாட்டையும்’ பழக வேண்டும் என்ற நியதியிருந்தது. இதன் காரணமாக வாய்யாட்டையும் வயலினையும் அருணாசலம் அவர்களிடமே கற்றுக் கொண்டார்.
1945 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் தனது தாயகமான யாழ்ப்பாணத்திற்குத் திரும்பினார். கண்டியில் ஒரு பெண்கள் கல்லூரியில் வயலின் பயிற்றுவிக்கும் ‘டியூசன்’ வகுப்பை நடாத்தினார். இக்காலப் பகுதியில் சின்னமணி என்பவரைத் திருமணம்செய்து கொண்டார். 1965ஆம் ஆண்டு தொடக்கம் 1970 ஆம் ஆண்டுவரை இலங்கை வானொலி நிலைய வயலின் வித்துவானாக ஒப்பந்த அடிப்படையில் கடமையாறினார்.
இம்மாபெருங்கலைஞர் 1971 ஆம் ஆண்டு தனது சகோதரி ஒருவரின் மரணச்சடங்கில் கலந்து கொள்ள திருகோணமலைக்கு வந்தபொழுது சித்தப்பாவான திரு.தில்லையம்பலம் அவர்களின் விருப்பத்திற்கு அமைவாக ஊர் திரும்பாமல் திருகோணமலையிலேயே தங்கி இங்குள்ள இளம் கலைஞர்களுக்கு வயலின் கற்றுக்கொடுத்தார்.
1972 இல் சிவயோக சமாசத்தை அமைத்த ஸ்வாமி கெங்காதரனாந்தாஜீயைச் சந்திக்கும் அரிய வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அன்றிலிருந்து சிவயோக சமாசத்தில்பிரதி சனிக்கிழமை தோறும் நடைபெறும் ‘பஜனைகளுக்கு’ வயலின் வாசிப்பதை தனது கடமையாக ஏற்றுக்கொண்டார். 1976ஆம் ஆண்டு ஸ்வாமிஜி சங்கரலிங்கம் அவர்களின் வயலின் வாசிக்கும் திறனையும் ஞானத்தையும் நன்கு அறிந்து ‘இசைமணி’ என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார்.
இக்காலப்பகுதியில் ‘வாய்பாட்டிலும், மிருதங்கத்திலும்’ சிறந்து விளங்கிய ஆனந்தபிரசாத் அவர்களையும், வாய்பாட்டுக்கலைஞராகிய கலாபூசணம் திரு.க.சண்முகலிங்கம் அவர்களையும், கலாவிநோதன் சித்திஅமரசிங்கம் அவர்களையும், மிருதங்க வித்துவான் முத்துசிவராசா அவர்களையும் கண்டு கலந்து குலாவிய கலைஞர் சங்கரலிங்கம் அவர்கள் இக்கலைஞர்களின் கூட்டுறவால் அமைக்கப்பட்ட ‘இராகமாலிகா’ என்னும் அமைப்பில் கலந்துகொண்டு வயலின் வாசிக்கத் தொடங்கினார்.
கலைஞர்களை இனங்கண்டு பாராட்டி அவர்களை அவர்கள் சார்ந்த துறையில் ஊக்கப்படுத்தும் அரிய பண்பு இவரிடமுண்டு. தன்னிடம் வயலின் கற்கும் கலைஞர்கள் வகுப்புக்கு வரத்தவறினால் அவர்கள் வீட்டிற்கே சென்று கற்பிக்கும் உதாரண புருசராகவும் இவர் விளங்கினார். இத்தகைய சிறந்த கலைஞரை திருகோணமலை ‘இசை நர்தன கலைஞர் ஒன்றியம்’ 2007இல் பாராட்டிக் கௌரவித்தது.
1998 ஆம் ஆண்டு இக்கலைஞருக்கு இலங்கை அரசு ‘கலாபூசணம்’ பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது. திருகோணமலை மாவட்டத்தில் சிறந்த வயலின் கலைஞராக விளங்கிய கலாபூசணம் திரு.வே.சங்கரலிங்கம் அவர்கள் தமது தொண்ணூறாவது வயதில் திருகோணமலையில் இலிங்கநகரில் அமரத்துவம் எய்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக